அத்தையம்மா

“அம்மா போனதுக்கப்பறம் அப்பா வேற கல்யாணமே வேண்டாம்ன்னு இருந்துட்டார். அமுலுவுக்கும் எனக்கும் அத்தை தான் எல்லாம். 

“எல்லாம்ன்னா??? எல்லாம் தான்…

“அம்மா இல்லைங்கற குறை கொஞ்சம் கூட இல்லாம அஞ்சு வயசுல இருந்து எங்கள வளத்தவ… நான் காலேஜ் போற வயசு வர வரைக்கும், அப்பா ராத்திரி தினமும் ஏன் லேட்டா வரார்ன்னு என்கிட்ட சொல்லாம, அவரோட பிம்பம் உடையாம அவ அண்ணனோட கண்ணியம் காப்பாத்தினவ…

” ‘எம்புள்ளங்கள மாதிரி அண்ணன் பிள்ளங்களை பாத்துகிட்டேன்’னு ஒருதரம் கூட பேசினதில்ல., யாருகிட்டயும்… எப்பவும்… 

“அவ ஒரு தரம் கூட சொன்னதில்லதான்., ஆனா நிதம் வாழ்ந்திருந்தா… அதான் அத்த… எங்க அத்த…

“தம்புள்ளைங்க ‘அம்மா… அம்மா…’ன்னு கூப்டுட்டு, அவளை சுத்தி சுத்தி வரத பாத்து ஒருவேள எங்க மனசு கஷ்டபட்ற கூடாதுன்னு, வீட்ல இருந்த எல்லாறையுமே அவள அவ பேரச்சொல்லியே கூப்பிடவச்சவ… எங்க அத்த… 

“அது மட்டுமா? இன்னும் எவ்வளவோ இருக்கு… அவ செஞ்சதெல்லாம் சொன்னா நாளெல்லாம் சொல்லிக்கிட்டே இருக்கலாம்…. 

“அதெல்லாத்தையும் தியாகம்ங்கற ஒத்த வார்த்தையில சுருக்கிட என் மனசு ஒப்பல… 

“எப்பவுமே சிரிச்ச முகத்தோட அன்பா மட்டுமே பாக்குற அத்தையோட அந்த கண்கள்., இன்னிக்கு ஒளியிழந்து போச்சு… இனிமே எழவே முடியாத தூக்கத்துக்கு போச்சு… ஒரு வாரம் ஐ.சி.யூ-ல தவிச்ச அத்தையோட உசிரு, என்னை பாக்காமலேயே போயிடுச்சு….

“எல்லாரும் அத்த செத்துட்டான்னு அழறாங்க… ஆனா நா மட்டும் அவள கொன்னுட்டேன்னு அழறேன்…. 

“நான் தான் அவள கொன்னுட்டேன்… இப்போ இல்ல… இன்னிக்கி இல்ல… பல வருஷத்துக்கு முன்னாடியே அவள நான் கொன்னுட்டேன்.

“அப்பா சொன்னத நம்பி… அப்பா சொன்னா சரிதான் வேற யாருகிட்ட சொல்லனும்ன்னு., அப்பா சம்மதம் மட்டும் போதும்ன்னு நான் நெனெச்சு., எல்லாமா இருந்த அத்தைக்கிட்ட கூட நான் பாரதிய விரும்பினத சொல்லாம… அவகிட்ட அத ரெண்டு வருஷம் மறைச்சு… மாலையும் கழுத்தும்மா அவ முன்னாடி, அப்பாவயும் சாட்சியா கூட்டிப்போய் நான் நின்னப்பவே., எப்பவும் சிரிக்கற அத்தையோட கண்ணுல கண்ணீர எட்டிப் பாத்தப்பவே., அதையும் மறச்சிட்டு எனக்கு ஆரத்தி எடுத்துட்டு என்ன கடந்து போறப்ப “என்கிட்ட ஒரு வார்த்த சொல்லனும்ன்னு தோனலைல உனக்கு”ன்னு என்ன கேக்காம கேட்டப்பவே அவள நான் கொன்னுட்டேன்.

“அன்னைக்கு சிரிப்ப நிறுத்துன அவளோட கண்கள், மறுபடி சிரிக்காமயே மூடிடிச்சு.

“அவ என்னை அன்னிக்கே மன்னிச்சுட்டா. ஆனா இன்னும் எத்தனை நாள் அழுது அழுது உருகினாலும் என்னைத்தான் என்னால மன்னிக்க முடியல. 

“அத்தை சாந்தியடைஞ்சிட்டா”.

Leave a comment