பல்லவர் சோழர் சேரர் பாண்டியர் உள்ளிட்ட பல அரசர்கள் நம் தமிழகத்தின் பல பகுதிகளை சிறப்பாக ஆண்டுள்ளனர். அவர்களுள், சங்ககாலத்தை சேர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான நெடுமான் அஞ்சியைப் பற்றிய கதையே வசந்த காலம். தலைநீர் நாடு (ஒகேனக்கல் அருவின் சங்ககாலப் பெயர்) என்று அன்று அழைக்கப்பட்ட தகடூர் என்ற நாட்டை ஆண்டு வந்தார் நெடுமான் அஞ்சி.
நெடுமான் அஞ்சி உடல் நலக்குறைவினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், ஆதரவற்ற தகடூர் கோட்டையை கைப்பற்ற சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை, தன்னுடைய படைத்தலைவர்களுள் ஒருவனும், தகடூர் அரசரின் மருமகனுமான இளந்திரையனைக் கொண்டு திட்டம் தீட்டுகிறான்.
நெடுமான் அஞ்சியின் மகளும் தகடூர் இளவரசியுமான மலர்விழி, தன் உள்ளத்தை கவர்ந்த அத்தை மகனான இளந்திரையனை தன் வசப்படுத்தி, தன் பக்கம் கொண்டுவரவும், தகடூர் படைகளை தலைமை தாங்கும் நிலையை உருவாக்கவும் கோஸ்வாமி என்ற மந்திரவாதியிடம் உதவி நாடுகிறாள். கோஸ்வாமியும் வசியம் செய்ய வழிசெய்கிறான்.
சேரமான், மலர்விழி ஆகிய இருவரின் திட்டத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் இளந்திரையன் எவ்வாறு தகடூர் கோட்டையை கைப்பற்றுகிறான் என்பதுதான் கதை.
கொடையிலும், வீரத்திலும் சிறந்து விளங்கிய இந்த நெடுமான் அஞ்சி தான் ஔவைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் ஆவார். இவரைப் பற்றிய குறிப்புகள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய சங்கத்தமிழ் நூல்களில் கிடைக்கின்றன.
ஆசிரியர் சாண்டில்யன்
பதிப்பகம் வானதி
பதிப்பு 2011 (முதல் பதிப்பு 1960)
பக்கங்கள் 120
விலை ரூ.30