சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு பொன்வேய்ந்த பராந்தக சோழனின் இரண்டாம் மகனான கண்டராதித்த சோழனின் காலப்பின்னணியில் அமைந்தது கொன்றை மலர் குமரியின் கதைக்களம். பராந்தக சோழனின் மூத்த மகனான ராஜாதித்யன் தக்கோலப் போரில் மரணமடைந்த காரணத்தால், பராந்தக சோழனின் மறைவிற்கு பிறகு கண்டராதித்த சோழன் அரியணை ஏறுகிறார். போரிலும், நாட்டின் எல்லைகளையும் விரிவாக்கும் எண்ணத்தைவிட சிவத்தொண்டிலும் பொன்னம்பலத்திலும் காலங்கழிப்பதையே அவர் விரும்புகிறார்.
சோழர்களிடம் எப்போதுமே பகைமை பாராட்டும் இராட்டிரகூடர்கள் சோழ நாட்டை ஆக்கிரமிக்கவும், சோழ தேசத்தை தங்கள் நாட்டுடன் இணைக்கவும் பல வழிகளில் முயன்றுகொண்டிருந்தனர். படைபலத்தால் வெல்வதைவிட சூழ்ச்சியால் சோழரை முறியடிக்க முயல்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, உதயன், மதுவணன் ஆகிய இராட்டிரகூட ஒற்றர்கள் மலர்மங்கை என்ற ஆதரவற்ற பெண்னொருத்தியை சிதம்பரத்தில் தங்க வைத்து, சைவ திருமுறைகளை பொன்னம்பலத்தில் பாடும் கூத்தன் என்ற இளைஞனிடம் தமிழும் இசையும் கற்க வைக்கின்றனர். இந்த சூழ்ச்சிகளை அறியா அப்பெண்ணும் அம்பலவானனிடம் பற்று கொண்டு, அவனருளாலே தமிழும் இசையும் கற்கிறாள். கூத்தனின் முயற்சியால் மலர்மங்கை மன்னர் முன் தேவாரம் பாடுகிறாள். அவளது தெய்வத்தமிழிலே மனம் இழக்கும் மன்னர், சிவபக்தியில் திழைத்த கருவுற்றுள்ள தன் மனைவியான செம்பியன்மாதேவியுடன் இருக்கவும், அவளுக்காக தேவாரப் பாடல்கள் பாடவும் அவளை தஞ்சைக்கு அழைக்கிறார். தஞ்சைக்கு செல்லும் மலர்மங்கை சோழர்களை சதியினால் வீழ்த்தினாளா இல்லையா என்பது தான் இதன் கதை.
ஆசிரியர் விக்கிரமன்
பதிப்பகம் முற்றம், சென்னை (முதற் பதிப்பு 2008)
பக்கங்கள் 128