பயணங்கள்

தொடங்கும் போது புரிவதில்லை

முடியும் போது தெரிவதில்லை

அவை விட்டுச்செல்வதெல்லாம்

காலடிச் சுவடுகள் தான்

கடற்கரையில் அல்ல- காலக்கரையில்!!!

உள்ளூர் அகதி

பத்தாம் மாதம்

பெற்ற தாயின் பந்தம் அறுத்தாய்!

ஐந்தாம் அகவையில்

தூக்கி வளர்த்த தந்தையின்

தோளில் உதைத்தாய் !

இருபத்தைந்தாம் வயதில்

நாட்டை வெறுத்தாய் –

காரணம் கேட்டால்

காண்போர் இல்லை என்றாய்!!

மேலை மங்கை மோகம் கொண்டு

தேசம் துறந்தாய் –

உன் அன்னை அதையும் பொறுத்தாள்.

ஈராண்டில் ஒரு முறை

தாயகம் வந்தாய் – ‘விருந்தினனாக’

விரட்டி அடித்தாள் உன்

மனம் கவர்ந்த கண்ணி –

திரும்பி வந்தாய் விட்டுப்போன தாயை எண்ணி

உன் கதறல் கேட்டு

அவளும் தன்னகம் திறந்தாள்

மீண்டும் வாழ்கிறாய்

தாய் மடியில் – ஆனால்

‘அகதியாய்’ உன் உடன் பிறந்தோர் பார்வையில்!