சங்க காலம். தமிழக வரலாற்றின் பொற்க்காலம். இலக்கியங்களும் அவை மூலம் வரலாறும் வளர்ந்த காலம். தமிழரின் வீரம், பெருமை, வாணிபம் போன்றவை புறநானூற்று பாடல்களாக வடிக்கப்பட்ட காலம். அக்காலப் பின்னணியில் கோவூர்க்கிழார் மற்றும் ஆலத்தூர் கிழர் பாடிய புறநானூற்றுப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்த கதை, அவனி சுந்தரி.
கோவூர்க்கிழார், நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான், கன்னர இளவரசி அவனி சுந்தரி, அவளது சேவகன் பூதுகன், புலவர் இளந்தத்தன் ஆகியோர் முக்கிய கதைமாந்தராவர்.
விலங்கு பகையல்லாது கலங்குபகையற்றதும்
மாற்றார் புகமுடியாதுமான புகார்
என்ற சிறப்பு பெற்ற பூம்புகாரின் பாதிப் பகுதி, கரிகாலன் காலத்துக்குப் பின் கடல்கோளால் அழிகிறது. ஆனாலும், அந்நகரின் பெருமையும், வணிகமும் குறையாமல் சோழ மன்னன் கிள்ளிவளவன் ஆண்டு வருகிறான். அவனது தாயாதியான நெடுங்கிள்ளி என்பவன், உறையூரில் ஆட்சி புரிகிறான். அவ்விருவருக்குமிடையே அதிகாரத்திற்கான போட்டி நிலவுகிறது.
இதனிடையே, சோழ தேசத்தை இரண்டாக்கவும், தாயாதிச் சண்டையை வலுப்படுத்தவும், கன்னர இளவரசி அவனி சுந்தரி சோழ தேசம் வருகிறாள். அவள் வந்த வேளையில் கிள்ளிவளவன் மர்மமான முறையில் இறந்துவிடுகிறான். மன்னனின் மரணத்தின் காரணத்தை இளவரசனான நலங்கிள்ளி கண்டறிவதும், நெடுங்கிள்ளியுடனான காரையாற்று போரில் அவனை கொன்று வெற்றி பெறுவதும் வரலாறு.
ஆசிரியர் சாண்டில்யன்
பதிப்பகம் வானதி பதிப்பகம், சென்னை
ஆண்டு 2015 (பதினாறாம் பதிப்பு)
பக்கங்கள் 158
விலை ரூ.70