சிவப்புக்கல் மூக்குத்தி

ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப வரலாற்றை எழுதப் புகுந்தால், நாட்டுக்குப் பல இராமாயணங்கள் கிடைக்கும்.

திருக்கடையூர் அருகே ஒரு கிராமத்தில் வளர்ந்து வரும் ஜானகி, பட்டணத்தில் நல்ல வசதி வாய்ப்புடன் உள்ள சுரேந்திரனின் குடும்பத்தில் திருமணமாகிப் போகிறாள். திருமண வாழ்வும் சுகமாக சென்று கொண்டுள்ளது. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் தாண்டியும் இருவருக்கும் குழந்தையில்லை என்ற குறையைப் போக்க, தானே தன் தங்கை மைதிலியை சுரேந்திரனுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். மூவருடைய வாழ்க்கையும் நன்றாக சென்றுகொண்டிருக்க மைதிலிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை கண்ணில்லாமல் பிறந்து சில நாட்களிலேயே இறக்கிறது.

நல்ல இடம் என்றால், எங்கள் கிராமத்திலே, லட்சக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் என்று அர்த்தமல்ல. தாய், தகப்பன், பாட்டன், பாட்டி எல்லாருமே உத்தமமாக வாழ்ந்தவர்கள் என்று அர்த்தம்.

மைதிலியை திருக்கடையூரிலிருந்து கணவன் வீட்டுக்கு அழைத்துச்செல்லும்போது ரயிலில் ஒரு ஏழைப்பெண் கைக்குழந்தையுடன் இருப்பதைப் பார்க்கிறாள். அவளுடைய குழந்தைக்கு மைதிலி பால் கொடுக்க அவள் ஜானகியிடம் ஒரு சிவப்புக்கல் மூக்குத்தியைத் தந்துவிட்டு அதற்குரிய பணமோ பொருளோ பெறாமல் சென்றுவிடுகிறாள்.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு காரியத்துக்கு இறைவன் சில தேதிகளை நிர்ணயித்திருக்கிறான். ‘எந்தச் சிற்றாறு எந்தப் பேராற்றைச் சந்திக்க வேண்டும்’ என்பதையும், ‘எந்தப் பேராறு எந்தக் கடலில் கலக்க வேண்டும்’ என்பதையும் அவனேதான் முடிவு செய்கிறான்.

சில மாதங்களில் ஜானகிக்கு ஒரு பெண் குழந்தை நல்லமுறையில் பிறக்கிறது. மைதிலிக்கு மறுமுறையும் குழந்தை இறந்தே பிறக்கிறது. இம்முறையும் அந்தப் பெண் சிவப்புக்கல் மூக்குத்தியை மைதிலிக்கு அணிவிக்கும்படி கூறிவிட்டு சென்றுவிடுகிறாள். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினையால் அவள் மூக்குத்தியை மைதிலிக்கு விட்டுவிட்டுச்சென்றுவிடுகிறாள்.

பின்பு ஜானகி என்ன ஆனாள், மைதிலிக்கு குழந்தை பிறந்ததா? சிவப்புக்கல் மூக்குத்தி தந்த பெண் யார் என்ற கேள்விகளின் பதிலே சிவப்புக்கல் மூக்குத்தியின் மீதி கதை.

விறுவிறுப்பான இக்கதையை கவியரசர் ஆறே மணிநேரத்தில் சொல்லச்சொல்ல அவர் தம்பி எழுதியதாக முன்னுரையில் கூறியுள்ளார். இந்தக் கதை திரைப்படமாகவும் வெளிவந்துள்ளதென்பது கூடுதல் செய்தி.

sivapukal mookuthi

ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
பக்கங்கள் : 280
பதிப்பகம்  : கண்ணதாசன் பதிப்பகம்
ஆண்டு: இருபதாம் பதிப்பு / 2013 அக்டோபர்

கடல் கொண்ட தென்னாடு

அதோ! லெமூரியா கண்ணுக்குத் தெரிகிறது.

உலகம் கண்டு வியந்த வன விலங்குகளையும், பறவைகளையும், வானோக்கி வளர்ந்த மரங்களையும், செடிகளையும், உலகம் கண்டுபிடிக்காத உலோகங்களையும், தாதுக்களையும், உலகத்தால் முன்னேறாத நாகரிகத்தையும், உலகத்தின் முன்னோடியாக விளங்கிய மொழியையும் தன்னகத்தே கொண்ட லெமூரியா, அதோ காட்சியளிக்கிறது!

லெமூரியா. தமிழர் அனைவரும் அவர்களுக்குள்ள தொன்மையை பறைசாற்ற சொல்லும் முதல் சொல். குமரிக்கண்டம், நாவலந்தீவு என்றெல்லாம் அழைக்கப்பட்ட மிகப்பெரிய நிலப்பரப்பு. ஏழ்தங்க நாடு, ஏழ்குணகரை நாடு, ஏழ்குறும்பனை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் குன்றநாடு, தென்பாலி, கொல்லம், நாவலர் தன்பொழில் ஆகிய நாடுகளும் அவை அடங்கியிருந்த ஏழ்மதுரை என்று புகழ்பெற்ற குமரி நாடும் இந்நிலப்பரப்பிலே அடக்கம்.

நீலக்கடல்!
அதற்கு மட்டும் சரித்திரம் எழுதத் தெரியுமானால், எவ்வளவோ விஷயங்களை அது எழுத முடியும்.

இங்கு இருந்த மனிதர்களைப் பற்றியும், அவர்களின் அகத்திணைப் பற்றியும் கவிஞர் கண்ணதாசன் எழுதியுள்ள நூல்தான் “கடல் கொண்ட தென்னாடு”. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் காதல் போராட்டமும் அதிகார போராட்டமும்தான் கதை.

மக்கள்!
அவர்கள் நல்லவர்கள். ஒருவனுக்குப் பதவி வந்தாலும் கை தட்டுவார்கள்; அவன் தண்டிக்கப்படும்போதும் அதே மக்கள் கைத்தட்டுவார்கள்.

கம்பளி யானை, நீள் வேங்கை, தினோஸாரியா, மந்தாக்குரங்கு, லெமூர் குரங்குகள் என்றிருந்த மிருக வகைகள். வாதுளம், கச்சாப்பழம், வரத்தாழை, கோதை நெல்லிக்கனி போன்ற பழவகைகள். செம்மாஞ்சி, சம்பல் போன்ற பறவையினங்கள். பஃறுளியாறு, செம்மரம், யூகிலிப்டஸ் என லெமூரிய நிலப்பிரப்பை நமக்கு அறிமுகம் செய்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

எபிரேய, சுமேரிய, பாலி, சமஸ்கிருத, பிராகிருத மொழிகளைப் போல, காலந்தெரியாத மொழி தமிழ் மொழி. அது மூலதேவனால் அருளப்பட்டது என்பார்கள். அகரத்தில் தொடங்கி, உலகின் சிகரத்தில் வாழ்ந்து வரும் அந்த மொழிக்கு புதிய ஆக்க தருவதற்காகவே இந்தச் சங்கம்.

தென்மதுரைத் தலைவனான நிலந்தரு திருவிற்பாண்டியன், இறையனாரைத் தலைவராகக் கொண்டு முதல் தமிழ்ச்சங்கம் உருவாக்குவதும், லெமூரியா கடற்கோளால் அழிவது, இமயமலை தோன்றுவது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

வஞ்சிக்கின்றவனுக்கு ரத்த பாசம் ஏது ? அரசாங்கங்ளில் இது ஒருவகை தர்மம். நேரம் பார்த்து இடத்தைப் பிடிப்பதே நியாயம் என்றாகிவிட்டது.

துன்பங்களிலேதோன் பற்றும் பாசமும் பரிணாம வளர்ச்சியடைகின்றன.

திருவிற்பாண்டியனின் மகன் வில்லாளன், நீலவிழி, செவ்வல்லி, பூம்பாவை,  கண்டதேவன், மணியழகி, செமோசி, அபிராசி, கடல் தெய்வமான பூதகி என்று பலரும் கதையில் வருகின்றனர். நாயகியாக அறிமுகமான நீலவிழி தீயஎண்ணகளாலும் பொறாமையாலும் அனைத்தையும் இழந்து தண்டிக்கப்படுவதும், கர்வியாக அறிமுகமாகும் அருவாநாட்டு இளவரசி பூம்பாவை நன்மதிப்பை பெறுவதுமாக கதை நகரும் விதம் அருமை. அம்ருதா என்ற ஆவியின் ஜாலங்கள் கதையின் நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது.

மனிதனுக்கு பதவி வரக்கூடாது; வந்தால் போகக்கூடாது.

KadalKondaThennaduஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
பக்கங்கள் : 280
பதிப்பகம்  : கண்ணதாசன் பதிப்பகம்
ஆண்டு: பத்தாம் பதிப்பு / 2015 அக்டோபர்