தமிழ்மாலை முப்பதால் சார்வர் பேரின்பு
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்
கப்பல்களை உடைய திருப்பாற்கடலை கடைந்து தேவர்களுக்கு அமிழ்தம் தந்தருளின திருமகள் நாதனான கண்ணபிரானை நிறைமதியை ஒத்த அழகிய முகத்தையும் செவ்விய அணிகலன்களையும் உடைய ஆயர் மகளிர் சென்று வணங்கி மங்களாசாசனம் பண்ணி, அத்திரு ஆய்ப்பாடியில் நாட்டுக்குப் பறையென்றறொரு தலைக்கீட்டையிட்டுத் தாங்கள் அடிமையைக் கைக்கொண்ட வரலாற்றை அழகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் திருவவதரித்தவரும் குளிர்ந்த புதிய தாமரை மலர்களாலாகிய மாலையை உடையவரும் உத்தமருமான பெரியாழ்வாருடைய திருமகளாரான ஆண்டாள் அருளிச்செய்த, திரள் திரளாகக்கூடி அனுபவித்த பிரபந்தமாய்த் தமிழ்ப் பாமாலையான முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இந்தச் சமுசாரத்திலே இப்பாசுர மாத்திரத்தைச் சொல்லுமவர்கள் எல்லா இடங்களிலும் பெரிய மலையை யொத்துத் திண்ணிதாயிருந்துள்ள நான்கு திருத்தோள்களையும் சிவந்த திருக்கண்களையும் அழகிய திருமுக மண்டலத்தையுமுடையவனாய்த் திருமகள் நாதனாய் உள்ள நாரயணன் அருளப் பெற்றுப் பேரின்பத்துடன் வாழ்வர்.
நன்றி: திருப்பாவை, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக வெளியீடு, சென்னை, 1995.